×

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாய்கடித்ததில் முன்னாள் விஏஓ உட்பட 12 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாய்கடித்துக் குதறியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சொக்கநாதப்பட்டியில் நாய் விரட்டி கடித்ததில் காயம் அடைந்த 8 பேர் சொக்கநாதபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். படுகாயமடைந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் உள்ளிட்ட 4 பேர் பொன்னமராவதியில் உள்ள பாப்பாயிஆச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சமீக காலமாக சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாய்கள் சாலைகளில் சுற்றி திரிவதால் பல்வேறு நபர்கள் விபத்துக்குள்ளாவது, நாய்கடித்து சிகிச்சை பெறுவதும் தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை நகர்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சொக்கநாதப்பட்டி என்ற கிராமத்தில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த நிலையில் தெருநாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 12 நபர்களை துரத்தி கடித்துள்ளது. இதில் 8 பேர் சொக்கநாதபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலும் படுகாயமடைந்த 4 பேர் பொன்னமராவதியில் உள்ள பாப்பாயிஆச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

அந்த பகுதி பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதே அச்சமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாய்கடித்ததில் முன்னாள் விஏஓ உட்பட 12 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ponnamarawati ,Pudukkottai ,Sokkanathapati ,Sokkanathapati Primary Health Centre ,Perumal ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சார்ச்சனை விழா